Wednesday, February 29, 2012

திருக்குறள் அதிகாரம் 17

அழுக்காறாமை

  
161.   ஒழுக்காறாக் கொள்க ஒருவனதன் நெஞ்சத்து
            அழுக்காறு இலாத இயல்பு.
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல்வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டுபோற்ற வேண்டும்.
   
162.     விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
             அழுக்காற்றின் அன்மை பெறின்

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப்பெற்றால்,  ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
163.   
                அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
                பேணாது அழுக்கறுப் பான்.
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல்  அதற்காகப்   பொறாமைப்படுவான். 
164.   
              அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றி
              ஏதம் படுபாக்கு அறிந்து.
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை  அறிந்து,  பொறாமை காரணமாக  அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
165.    
          அழுக்காறு உடை உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
          வழுக்கியும் கேடின் பது.
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா,  அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத்  தருவது அது. 
166.   
         கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
         உண்பதூஉம் இன்றிக் கெடும்.


பிறர்க்குத் உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு  பொறாமைப்படுகின்றவனுடைய   சுற்றம்,  உடையும் உணவும் இல்லாமல் போய்விடும்.
167.    
          அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
           தவ்வையைக் காட்டி விடும்.


பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத்தன தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
168.   
          அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
           தீயுழி உய்த்து விடும்.
 பொறாமை என்று   கூறப்படும்  ஒப்பற்ற பாவி ஒருவனுடைய  செல்வத்தையும் கெடுத்துத்  தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
169.   
       அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
       கேடும் நினைக்கப் படும்.


பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
  
170.  
       அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
       பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பொறாமைப்பட்டுப்  பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை;  பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும்  இல்லை.  

Tuesday, February 28, 2012

திருக்குறள் அதிகாரம் 16

பொறை உடைமை    
151. 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.



தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வோரையும் பொறுப்பதே தலையான பண்பாகும். 

152.  

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
 மறத்தல் அதனினும் நன்று.



வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை  எப்போதும் பொறுக்க வேண்டும். அத் தீங்கை  நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட  நல்லது.


153.

 இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.


வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல், நீக்குதல்;  வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு  செய்தலைப் பொறுத்தலாகும்.

154.


  நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொயுடைமை
போற்றி யொழுகப் படும்.



 நிறை உடையவனாக இருக்கும்  தன்மை தன்னை விட்டு  நீங்காமலிருக்க வேண்டினால்,  பொறுமையைப்  போற்றி ஒழுக வேண்டும்.


155.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பார
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து



 (தீங்கு செய்தவரைப்)  பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப்  பொன்போல்  மனத்துள்  வைத்து  மதிப்பர்.   

156.    

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.



தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருந்தினவர்க்கு  ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.  

157.   

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.


தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த  போதிலும்,  அதனால்,  அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து,  அறம் அல்லாதவைகளச் செய்யாதிருத்தல் நல்லது.


158.   

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

 செருக்கினால் தீங்கானவற்றைச்  செய்தவரைத் தாம் தம்முடைய  பொறுமைப்  பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.

159.   


துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சசொல் நோற்கிற் பவர்.



வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப்   பொறுத்துக்  கொள்பவர்,  துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.


160.  

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.



உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர்  சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

Monday, February 27, 2012

திருக்குறள் அதிகாரம் 15

பிறன்இல் விழையாமை  


141.  

பிறன் பொருளால்   பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள்  கண்டார்கண் இல். 

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை  உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடும் இல்லை 


142. 

அறன் கடை  நின்றாருள் எல்லாம்  பிறன் கடை 
நின்றாரின்  பேதையார் இல். 

அறத்தை  விட்டுத்  தீநெறியில் நின்றவர்  எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப்  போல் அறிவிலிகள் இல்லை

143. 

விளிந்தாரின்  வேறு  அல்லர்  மன்ற தெளிந்தாரில் 
தீமை  புரிந்து  ஒழுகுவார் 


ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரை விட  வேறுபட்டவர்    அல்லர்.

144.

எனைத்துணையர்  ஆயினும்  என் ஆம்? தினைத்துணையும் 
தேரான்  பிறனில்  புகல்

               
  தினையளவும்  ஆராய்ந்து  பார்க்காமல்  பிறனுடைய மனைவியிடம்
செல்லுதல்  எவ்வளவு  பெருமையை உடையவராயினும்  என்னவாக  முடியும்?

145.

 எளிது  என  இல்லிறப்பான்  எய்தும்  எய்ஞான்ரும்      
 விளியாது  நிற்கும்  பழி

இச்  செயல்  எளியது  என  எண்ணிப்  பிறனுடைய  மனைவியிடம்   நெறி  தவறிச்  செல்கின்றவன்  எப்போதும்  அழியாமல் நிலை  நிற்கும்  பழியை  அடைவான்     


146. 

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.


பகை பாவம் அச்சம் பழி என்னும் இந் நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
 
 
147.  
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
 
 
 
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.  
 
 
 
148. 
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
 
 
 
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
 
 
 
149. 

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்
 
 
 
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே  ஆவார்.
 
 
150.  
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
 
 
 
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின்  பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது. 

Wednesday, February 22, 2012