ஈகை
221.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறயெதிர்ப்பை நீர் துடைத்து.
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது,
மட்டவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக்
கொடுக்கும் தன்மை உடையது.
222.
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
பிறரிடமிருந்து பொருள் பெற்றுக்கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லை என்றாலும்
பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.
223.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
யான் வறியன்' என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்குக் கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.
224.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும்
வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப் படுவதும்
துன்பமானது.
225.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
தவ வலிமை உடையவரின் வலிமை பசுயைப் பொறுத்துக்
கொள்ளலாகும். அதுவும் அப் பசியை உணவு கொடுத்து
மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
226.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
வறியவரின் கடும் பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற
ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து
வைக்கும் இடமாகும்.
227.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம்
உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.
228.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து
பின் இழந்து விடும் வன்கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து
மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?
229.
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.
230.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
சாவதவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால்
வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.