Friday, February 22, 2013

திருக்குறள் அதிகாரம் 26

புலான்மறுத்தல்



251.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

தன உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான்
மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு
அருளுடையவனாக இருக்க முடியும்?  

252.
பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு.

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு, அப் பொருளை
வைத்துக் காப்பாற்றதவர்க்கு இல்லை; அருளுடையவராக
இருக்கும் சிறப்பு, புலால் தின்பவர்க்கு இல்லை

253.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்கது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின்
மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் 
நெஞ்சம் போல் நன்மையாகிய அருளைப் போற்றாது.

254.
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்.

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்;
அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லுதல்; அதன்
உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

255.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் 
உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன்
உண்டால் நரகம் அவனை  வெளிவிடாது.   

256.
தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

புலால் தின்னும்பொருட்டு உலகத்தார் உயிர்களைக்
கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன்
விற்றவர் இல்லாமற்   போவர்.  

257.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணர்வார்ப்பெறின்.

புலால் உண்ணாமலிருக்க வேண்டும்; ஆராய்ந்து
 அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின்
புண் என்பதை உணரலாம்.

258.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணா
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர்
உயிரினிடத்திலிருந்து   பிரிந்துவந்த  உடம்பாகிய ஊனை
உண்ணமாட்டார்.
 

259.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

நெய் முதலிய பொருள்களைத்  தீயில் சொரிந்து
ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக்
கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.  

260.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும்தொழும்.

ஓருயிரையும் கொள்ளாமல் புலால் உண்ணாமல்
வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும்
கைகூப்பி வணங்கும்.