Tuesday, August 28, 2012

திருக்குறள் அதிகாரம் 24

புகழ்


231 .


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.
   
 
வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும். அப் புகழ அல்லாமல்  உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.


232 .


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.


புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
 
233 .


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.
 
 
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலை நிற்கவல்லது வேறொன்றும் இல்லை.



234 .


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.
 
 நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.   



235 .

நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.
 
 
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.




236 .


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

 
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்கு தோன்றுவதை விடத் தோன்றாமலிருப்பது  நல்லது.    



237 .
 
புகழ்பட வாழாதார் தந்நோ வார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
 
 
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்ற வரை நொந்துகொள்ளக் காரணம் என்ன?
 
238 .


வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.
 
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறா விட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.


239 .


வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

 
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.


240 .



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

 
   தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.