துறவறவியல்
அருளுடமை
241.
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன;(உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
242.
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது.
243.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்பஉலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அரும் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
244.
மன்நுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
தன உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கிற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
245.
அல்லல் அருளாள்வாற்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலங் கரி.
அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்கு சான்று ஆவார்.
246.
ள் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
அருள் இல்லாதவராய் அறமல்லாதவகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிபோலாகிய அறத்திலிருந்துநீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர்.
247,
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
248.
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்றுவிளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே;அவர் ஒரு காலத்திலும்
சிறந்து விளங்குதல் இல்லை.
249.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றலால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச் செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
250.
வலியார்முன் தன்னை நினைக்காதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
அருள் இல்லாதவன் தன்னைவிட மெலிந்தவர் மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்கவேண்டும்.