அழுக்காறாமை
161. ஒழுக்காறாக் கொள்க ஒருவனதன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல்வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டுபோற்ற வேண்டும்.
162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப்பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
163.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
164.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றி
ஏதம் படுபாக்கு அறிந்து.
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
165.
அழுக்காறு உடை உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
வழுக்கியும் கேடின் பது.
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா, அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத் தருவது அது.
166.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
பிறர்க்குத் உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் போய்விடும்.
167.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத்தன தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
168.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
169.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
170.
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.