Monday, August 16, 2010

திருக்குறள் அதிகாரம் 11

செய்ந்நன்றி அறிதல்

101.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

102.
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மானப் பெரிது.

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப் பெரியதாகும்.

103.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும்.

104.
தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

105.
உதவி வரைத்தன்று உதவி, உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து.

கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.


106.
மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது.துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவி-யவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.

107.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

108.
நன்மை மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் முன் செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

109.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

முன் உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

110.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

திருக்குறள் அதிகாரம் 10

இனியவை கூறல்



91.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

92.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்ஈகையைவிட நல்லதாகும்.

93.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொ லினதே அறம்.

முகத்தால் விரும்பி - இனியவை நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில்உள்ளதே அறமாகும்.

94.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

95.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.

வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும்; மற்றைய அணிகள் அணிகள் அல்ல.

96.
அல்லவை தேய் அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய, அறம் வளர்ந்து பெருகும்.

97.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

98.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

99.
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

100.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்து தின்பதைப் போன்றது.

திருக்குறள் அதிகாரம் 9

விருந்தோம்பல்
 


81.
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

82.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

83.
வரவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

தன்னை நோக்கி வரும் விந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை,துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

84.
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

85.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்?

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

86.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

87.
இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

88.
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப் படா தார்.

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்கள வருந்திக் காத்துப் (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.

89.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை: மடவார்கண் உண்டு.

செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.


90.
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடி விடும்; அது போல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

Wednesday, August 11, 2010

திருக்குறள் அதிகாரம் 8 அன்புடைமை




71.
 அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

  புன்கண்நீர் பூசல் தரும்.


அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.


72.
அன்பிலர் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.



73.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.


74.
 அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
  நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.


75.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவார்.


 76.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;

மறத்திற்கும் அதே துணை.

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால்வீரத்திற்கும் அதுவே துணையாகும்.


77.
என்பு இலதனை வெயில்போலக் காயுமே

அன்பு இலதனை அறம்.

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

 
78.
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று.

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.


79.
புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?



80.
அன்பின் வழியது உயிர்நிலை அதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

Friday, July 16, 2010

திருக்குறள் அதிகாரம் ஏழு

மக்கட்பேறு



61.
பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை
அறியுன் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்
பேறுகளை யாம் மதிப்பதில்லை.


62.
ஏழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்
பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும்
தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

63.
நம்பொருள் என்பதம் மக்கள்; அவர் பொருள்
தம்தம் வினையான் வரும்.

தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர்
கூறுவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய
வினையின் பயனால் வந்து சேரும்.


64.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

தம்முடைய மக்களின் சிறு கைகளால்
அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு
அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்.


65.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம்
தருவதாகும்; அம் மக்களின் மழலைச் சொற்களைக்
கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

66.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன்
இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது,
யாழின் இசை இனியது என்று கூறுவர்.


67.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி,
கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்
படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

68.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம்
பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம்
மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

69.
ஈன்ற பொழுதில் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

தன மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர்
சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப்
பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியை விடப்
பெரிதும் மகிழ்வாள்.


70.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

மகன் தன தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு,
இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன
தவம் செய்தானோ' என்று பிறர் புகழ்ந்து சொல்லும்
சொல்லாகும்.

Thursday, July 15, 2010

திருக்குறள் அதிகாரம் ஆறு

வாழ்க்கைத் துணைநலம்



51.
 மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித்
தன கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க
வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.


52.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.


இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம்
இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு
எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

53.
இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில்
இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால்
வாழ்க்கையில் இருப்பது என்ன?


54.
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை
இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமை
யுடையவை வேறு என்ன இருகின்றன?


55.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே
தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள்
பெய் என்றால் மழை பெய்யும்!

56.
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொல்காத்துச் சோர்விலாள் பெண்.


கற்புநெறியில் தன்னையும் காத்துகொண்டு, தன்
கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும்
காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்


57.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறை காக்குங் காப்பே தலை.

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை
என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும்
பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

58.
பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்
பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய
மேலுலக வாழ்வைப் பெறுவர்.

59.
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு,
இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும்
பெருமித நடை இல்லை.


60.
மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்
என்று கூறுவார்நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.

திருக்குறள் அதிகாரம் ஐந்து

இல்வாழ்க்கை



41.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன்
அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில்
நிலை பெற்ற துணையாவான்.


42.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே
இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு
வாழ்கின்றவன் துணையாவான்.

43.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார்,
தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல்
போற்றுதல் சிறந்த கடமையாகும்.



44.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல.

பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து,
செலவு செய்யும்போது பகுத்து உண்பதை
மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு
எப்போதும் குறைவதில்லை.


45.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக
விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும்
பயனும் அதுவே ஆகும்.

46.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி
வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில்
சென்று பெறத்தக்கது என்ன?


47.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்
- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு
விளங்குகின்றவன் ஆவான்.


48.
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா; இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து , தானும்
அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்தாரைவிட
மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.


49.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது
இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன்
பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால்
மேலும் நன்மையாகும்.


50.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று
வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வ
முறையில் வைத்து மதிக்கபடுவான்.

Wednesday, July 7, 2010

திருக்குறள் 31-40 அறன் வலியுறுத்தல், அதிகாரம் நான்கு



31. சிறப்புஈனும்செல்வமும் ஈனும், அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?

அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?

32. அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.


ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிடநன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல்மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.


33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்.


செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம், அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.



34. மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனித்தும்அறன்;
ஆகுல நீர பிற.


ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; ஆறாம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை உடையவை.



35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


பொறாமை, ஆசை, சினம்,கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.


36. அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.


இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

37. அறத்தாறு இதுஎன வேண்டா, சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.


பல்லக்கைச் சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஹ்து என்று கூறவேண்டா.


38. வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஹ்தொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.


ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.



39. அறத்தான் வருவதே இன்பம்மற்றெல்லாம்
புறத்த; புகழும் இல.


அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தொடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.


40. செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.



ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.

திருக்குறள் 21-30 நீத்தார் பெருமை அதிகாரம் மூன்று



21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.


ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களில் துணிவாகும்

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.



பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

24. உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்எனும் வைப்பிற்குஓர் வித்து.


அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன்,மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.


25. ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்
இந்திரனே சாலும் கரி.



ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

26. செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர், செய்வற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.


27. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.


செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.


பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில்
அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறை மொழிகளே காட்டிவிடும்.


29. குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.


நல்ல பண்புகளாகிய மலையின் மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.


30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.


எல்லா உயிர்களித்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

திருக்குறள் வான்சிறப்பு அதிகாரம் இரண்டு




11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.



12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருட்களைத் விளைத்துத் தருவதோடு பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.


13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

மழை பொய்யாமல் பொய்படுமானால், கடல்
சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே
நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.



14 ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.


மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால் (உணவுப்பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.


15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


பெய்யாமல் வாழ்வைக் கெடுக்கவல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.


16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.


17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின்.


மேகம் கடலிலிருந்து நீரைக்கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன வளம் குன்றிப் போகும்.


18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.



மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது. நாள் வழிபாடும் நடைபெறாது.


19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.


மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும்,தம்பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.


20. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.


எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

திருக்குறள் அதிகாரம் 1

கடவுள் வாழ்த்து




1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.



2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால்,அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்


அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.


4. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.


5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.


6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.


7. தனக்குவமை இல்லாதான்தாள் செந்தார்க்கு சே அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.



8. அறஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
.

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப்
பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்
பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க
முடியாது.


9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண்
குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை
வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாகும்.



10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

Wednesday, April 21, 2010

முன்மொழியும் பின்மொழியும்


அறஞ்செய விரும்பு.
அன்பு வழியில் திரும்பு.

இயல்வது கரவேல்.
ஈகையை மறவேல்.

சனி நீராடு.
சமாதனதிற்குப் போராடு.

இணக்கமறிந்து இணங்கு.
வணக்கமறிந்து வணங்கு.

நன்றி மறவேல்.
நல்லாரைத் துறவேல்.

கூடிப் பிரியேல்
கொடியருடன் திரியேல்.

நெற்பயிர் விளை.
புற்பயிர் களை.

வல்லமை பேசேல்.
வையகத்தாரை ஏசேல்.

பிழைபடச் சொல்லேல்.
பழிபட நில்லேல்.

நைவினை நணுகேல்.
பொய்வினை அணுகேல்.

நூல் பல கல்.
நூல் வழி நில்.

Wednesday, April 14, 2010

ஒற்றுமையின் பலம்

சில புறாக்கள் இரை தேடி பறந்து திரிந்தன. இறுதியில் ஓர் இடத்தில் அரிசி
மணிகள் சிதரிக்கிடப்பதைக் கண்டன. ஆர்வதுடனே அங்கே இறங்கி அமர்ந்தன. அரிசியை பொறுக்கி திண்ண தொடங்கின.
திடீரென ஒரு வலை அவைகளின் மீது விழுந்தது.அதில் அவை சிக்கிக் கொண்டன வலையை வைத்திருந்த வேடன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அவை பயந்து மனம் கலங்கின. அவைகளின் தலைவனுக்கு ஒரு தைரியம் உண்டாயிற்று. பயபடாதீர்கள் . வலையை அப்படியே கவ்விப்பிடித்து ஒற்றுமையாய் பறந்து செல்வோம் என்று உத்தரவு போட்டது. அதன் படியே புறாக்கள் வலையை அலகால் பிடித்துகொண்டு ஒற்றுமையாய் பறந்து சென்றன.வேடன் பின் தொடர்ந்து ஓடிப் பாத்தான்.முடியவில்லை.
ஒரு எலியின் வளை அருகே அவை தரை இறங்கின . எலி வெளியே வந்து தன் கூறிய பற்களால் வலையை கடித்து புறாக்களை விடுவித்தது. அவை எலிக்கு நன்றி சொல்லிவிட்டு உற்சாகமாக மீண்டும் பறந்து சென்றன.

ஒற்றுமையே பெலன். பார்த்தீர்களா?