Wednesday, July 7, 2010
திருக்குறள் வான்சிறப்பு அதிகாரம் இரண்டு
11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருட்களைத் விளைத்துத் தருவதோடு பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மழை பொய்யாமல் பொய்படுமானால், கடல்
சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே
நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
14 ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால் (உணவுப்பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்கவல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின்.
மேகம் கடலிலிருந்து நீரைக்கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன வளம் குன்றிப் போகும்.
18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது. நாள் வழிபாடும் நடைபெறாது.
19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும்,தம்பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.
20. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment