Wednesday, July 7, 2010
திருக்குறள் 21-30 நீத்தார் பெருமை அதிகாரம் மூன்று
21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களில் துணிவாகும்
22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.
23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
24. உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்எனும் வைப்பிற்குஓர் வித்து.
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன்,மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
25. ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
26. செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர், செய்வற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
27. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில்
அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறை மொழிகளே காட்டிவிடும்.
29. குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
நல்ல பண்புகளாகிய மலையின் மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
எல்லா உயிர்களித்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment