Thursday, July 15, 2010

திருக்குறள் அதிகாரம் ஐந்து

இல்வாழ்க்கை



41.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன்
அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில்
நிலை பெற்ற துணையாவான்.


42.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே
இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு
வாழ்கின்றவன் துணையாவான்.

43.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார்,
தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல்
போற்றுதல் சிறந்த கடமையாகும்.



44.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல.

பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து,
செலவு செய்யும்போது பகுத்து உண்பதை
மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு
எப்போதும் குறைவதில்லை.


45.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக
விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும்
பயனும் அதுவே ஆகும்.

46.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி
வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில்
சென்று பெறத்தக்கது என்ன?


47.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்
- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு
விளங்குகின்றவன் ஆவான்.


48.
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா; இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து , தானும்
அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்தாரைவிட
மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.


49.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது
இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன்
பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால்
மேலும் நன்மையாகும்.


50.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று
வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வ
முறையில் வைத்து மதிக்கபடுவான்.

No comments:

Post a Comment