Friday, July 16, 2010

திருக்குறள் அதிகாரம் ஏழு

மக்கட்பேறு



61.
பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை
அறியுன் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்
பேறுகளை யாம் மதிப்பதில்லை.


62.
ஏழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்
பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும்
தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

63.
நம்பொருள் என்பதம் மக்கள்; அவர் பொருள்
தம்தம் வினையான் வரும்.

தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர்
கூறுவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய
வினையின் பயனால் வந்து சேரும்.


64.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

தம்முடைய மக்களின் சிறு கைகளால்
அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு
அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்.


65.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம்
தருவதாகும்; அம் மக்களின் மழலைச் சொற்களைக்
கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

66.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன்
இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது,
யாழின் இசை இனியது என்று கூறுவர்.


67.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி,
கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்
படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

68.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம்
பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம்
மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

69.
ஈன்ற பொழுதில் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

தன மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர்
சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப்
பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியை விடப்
பெரிதும் மகிழ்வாள்.


70.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

மகன் தன தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு,
இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன
தவம் செய்தானோ' என்று பிறர் புகழ்ந்து சொல்லும்
சொல்லாகும்.

No comments:

Post a Comment