துறவு
341 .
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து,
எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக
இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம்
அடைவதில்லை.
|
342 .
வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
துனபமில்லாத நிலைமை வேண்டுமானால்,
எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயே
துறக்கவேண்டும்; துறந்தபின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள்
பல.
343 .
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
344 .
இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.
தவம் செய்வதற்கு ஒரு பற்றும்
இல்லாதிருத்தல் இயல்பாகும்; பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
345 .
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கும்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்குஉடம்பும் மிகையான பொருள்; ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?
346 .
யான் எனது என்னுஞ் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்கு கின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
347 .
பற்றி விடாது இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
யான் எனது என்னும் இருவகைப் பற்றுகளையும் பற்றிக் கொண்டு விடாதவரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
348 .
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்ரை யவர்.
முற்றத் துறந்தவரே உயர்ந்த நிலையினர்
ஆவர்; அவ்வாறு துறக்காத மற்றவர்,
அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
349 .
பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று
நிலையாமை காணப்படும்.
இருவகைப் பற்றும்
அற்றபொழுதே அந்நிலை பிறவித்துன்பத்தை ஒழிக்கும்; இல்லையானால்
(பிறவித்துன்பம் மாறி மாறி வந்து)
நிலையாமை காணப்படும்.
350 .
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்ரைப்
பற்றுக பற்று விடற்கு.
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றைமட்டும் பற்றிக்கொள்ள வேண்டும்; உள்ள
பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்