Tuesday, April 22, 2014

திருக்குறள் அதிகாரம் 35

துறவு
341 . 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்


ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து  பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப்  பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

342 . 

வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டுஇயற் பால பல.


துனபமில்லாத நிலைமை வேண்டுமானால்,  எல்லாப் பொருள்களும்   உள்ள காலத்திலேயே துறக்கவேண்டும்; துறந்தபின்  இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

343 .
 
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.



ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின் ஆசையையும்  வெல்லுதல் வேண்டும்.  அவற்றிற்கு வேண்டிய பொருள்களை  எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

344 . 

இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.


தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும்;   பற்று  உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு  வழியாகும்.  

345 . 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கும் 
உற்றார்க்கு உடம்பும் மிகை.


பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்குஉடம்பும்  மிகையான  பொருள்; ஆகையால் அதற்கு மேல் வேறு  தொடர்பு கொள்வது ஏனோ? 
346 . 

யான் எனது என்னுஞ் செருக்குஅறுப்பான் வானோர்க்கு 
உயர்ந்த உலகம் புகும்.



உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத  பொருளை   எனது  எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்கு கின்றவன்,  தேவர்க்கும்  எட்டாத  உயர்ந்த நிலை அடைவான். 

347 . 

பற்றி விடாது இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.



யான் எனது என்னும் இருவகைப் பற்றுகளையும் பற்றிக் கொண்டு   விடாதவரை,  துன்பங்களும் விடாமல் பற்றிக்  கொள்கின்றன.  
348 . 

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி 
வலைப்பட்டார் மற்ரை யவர்.


முற்றத் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர்;  அவ்வாறு  துறக்காத  மற்றவர், அறியாமையாகிய வலையில்  அகப்பட்டவர் ஆவர்.

349 . 

பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று 
நிலையாமை காணப்படும்.


இருவகைப் பற்றும் அற்றபொழுதே  அந்நிலை பிறவித்துன்பத்தை  ஒழிக்கும்;  இல்லையானால் (பிறவித்துன்பம்  மாறி மாறி வந்து) நிலையாமை  காணப்படும். 

350 . 

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்ரைப் 
பற்றுக பற்று விடற்கு.


பற்றில்லாதவனாகிய  கடவுளுடைய  பற்றைமட்டும் பற்றிக்கொள்ள வேண்டும்; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப்  பற்ற வேண்டும்

No comments:

Post a Comment