Wednesday, July 31, 2013

திருக்குறள் அதிகாரம் 33

கொல்லாமை

321.
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

 அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும்
கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள்
எல்லாவற்றையும் விளைக்கும்.

 
 
322.
பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.


கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு
பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார்  தொகுத்த
அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். 

 
323.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது;
அதற்கு  அடுத்த நிலையில் வைத்து கூறத்தக்கதாகப்
பொய்யாமை நல்லது. 
 
 
324.
நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.


நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது
எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் 
போற்றும் நெறியாகும். 

 
325.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறந்
தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக்
கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.


326.
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று.


கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவ
னுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்க் கொண்டு செல்லும்
கூற்றவனும் செல்லமாட்டான்.  

 
327..
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை.


தன உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக
நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காகத்தான்  தான் வேறோர்
உயிரை  நீக்கும் செயலைச் செய்யக் கூடாது.

 
328.
நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்
கொன்றுஆகும் ஆக்கம் கடை.


கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம்
பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால்
வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

 
329.
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையார்
புன்மை தெரிவார் அகத்து.


கொலைத்தொழிலினராகிய  மக்கள் அதன் இழிவை
ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த்
தாழ்ந்து தோன்றுவர்.  

 
330.
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

நோய் மிகுந்த  உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை
உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புக
ளிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர். 

 

No comments:

Post a Comment