Friday, July 26, 2013

திருக்குறள் அதிகாரம் 30

வாய்மை

291.
வாய்மை எனப்படவது யாதெனின் யாதொன்றும்
தீமை  இலாத சொலல்.
 
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது
மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச்
சொல்லுதல் ஆகும்.
 
 
292.
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.


குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானால்
பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க
இடத்தைப் பெறுவனவாம்.
 
 
293.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்
குறித்துப் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால்  
அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
 

294.
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள்ளெல்லாம் உளன்.
 
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல்
நடப்பானானால், அத்தகையவன் உலகத்தாரின்
உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.


295.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை
பேசுவானானால், அவன் தவத்தோடு  தானமும் ஒருங்கே
செய்வாரைவிடச் சிறந்தவன்.  

296.
பொய்யாமை அன்ன புகழ்இல்லை ஏய்யாமை
எல்லா அறமும்  தரும்.
 
ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலைப் போன்ற
புகழ்நிலை வேறொன்றும் இல்லை; அஃது  அவன்
அறியாமலே  அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.


297.
பௌய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
 
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே
போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும்
நல்லது ஆகும்.



298.
புறத்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்.
 
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால்
ஏற்படும்; அதுபோல,  அகத்தே தூய்மையாக விளங்குதல் 
வாய்மையால் உண்டாகும். 


299.
எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கெ விளக்கு..
 
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்)  விளக்குகள் எல்லாம்
 விளக்குகள் அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்)
 பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.  


300.
யாமெய்யாக் கண்டவுற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள்,
வாய்மையை விட எத்தன்மையாலும் சிறந்தவைளாகச்
சொல்லத் தக்கவை வேறு இல்லை.

No comments:

Post a Comment