Tuesday, July 23, 2013

திருக்குறள் அதிகாரம் 28


கூடாவொழக்கம்(கூடா ஒழுக்கம்)
 



271.
வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்ச மனம் உடையவனது பொய்யொழுக்கத்தை
அவனுடைய உடம்பில் கலந்துநிற்கும் ஐந்து பூதங்களும்
கண்டு தம்முள் சிரிக்கும்.

272.
வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால்
வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம்,
ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?


 
273.
வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்
கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப்
போர்த்திக்கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றது.


274.
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த் தற்று.

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத
தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன்
பறவைகளை வலை வீசிப் பிடித்தலைப் போன்றது.  


275.
பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும்.
 
'பற்றுக்களைத் துறந்தோம்' என்று சொல்கின்றவரின்
பொய்யொழுக்கம்   'என்ன செய்தோம் என்ன செய்தோம்'
என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.  


276.
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
 
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப்
போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப் போல்
இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.

277.
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.

புறத்தில் குன்றிமநிபோல் செம்மையானவராய்க்
காணப்பட்டாராயினும், அகத்தில் அகத்தில் குன்றிமணியின்
மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு. 


278.
மனத்தது மாசுஆக மாண்பார்நீர் ஆடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர்.

மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு
பெற்றவரைப்போல் நீரில் மூழ்கி மறைந்து நடக்கும்
வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.


279.
ணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன்
தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின்
பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.  


280.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால்,
மொட்டை அடித்தாலும் சடைவளர்த்தலுமாகிய புறக்
கோலங்களும் வேண்டாம்.


No comments:

Post a Comment