Thursday, July 15, 2010

திருக்குறள் அதிகாரம் ஆறு

வாழ்க்கைத் துணைநலம்



51.
 மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித்
தன கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க
வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.


52.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.


இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம்
இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு
எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

53.
இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில்
இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால்
வாழ்க்கையில் இருப்பது என்ன?


54.
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை
இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமை
யுடையவை வேறு என்ன இருகின்றன?


55.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே
தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள்
பெய் என்றால் மழை பெய்யும்!

56.
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொல்காத்துச் சோர்விலாள் பெண்.


கற்புநெறியில் தன்னையும் காத்துகொண்டு, தன்
கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும்
காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்


57.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறை காக்குங் காப்பே தலை.

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை
என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும்
பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

58.
பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்
பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய
மேலுலக வாழ்வைப் பெறுவர்.

59.
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு,
இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும்
பெருமித நடை இல்லை.


60.
மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்
என்று கூறுவார்நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.

No comments:

Post a Comment