விருந்தோம்பல்
81.
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
82.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
83.
வரவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
தன்னை நோக்கி வரும் விந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை,துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
84.
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
85.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்?
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
86.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
87.
இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
88.
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப் படா தார்.
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்கள வருந்திக் காத்துப் (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.
89.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை: மடவார்கண் உண்டு.
செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
90.
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடி விடும்; அது போல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.
No comments:
Post a Comment