Wednesday, March 7, 2012

திருக்குறள் அதிகாரம் 22

ஒப்புரவு அறிதல்

211 .    

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.



இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்?  மழை போன்றவர் செய்யும்  உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
  

212 .  

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


ஒப்புரவாலன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

213 .  

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் ல்ல பிற.



பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத்  தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

214 .  


ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள்  வைக்கப்படும்.


ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்;  மற்றவன் செத்தவருள்   சேர்த்துக்  கருதப்படுவான்.  

215 .   


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.


ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின்  செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற்  போன்றது.

216 .  


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.



ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம்  செல்வம் சேர்ந்தால்  அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற்  போன்றது.

217 .   


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.



ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புகளும் மருந்தாகிப் பயன் படத் தவறாத மரம் போன்றது.

218 .  


இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.


ஒப்புரவு அறிந்து ஒழுகுதாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வவளம்  இல்லாத காலத்திலும்  ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.   

219 .  


நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர்
செய்யாது அமைகலா வாறு.


ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல்,  செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற   தன்மையாகும்.

220 .   


ஒப்புரவினால்வரும் கேடெனில் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து



ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.

No comments:

Post a Comment